அந்தியூர்: விஷம் குடித்து முதியவர் தற்கொலை
அந்தியூர் அருகே மூட்டு வலி குணமாகவில்லை என்ற வருத்தத்தில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை.
HIGHLIGHTS
ஆப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி சக்தி நகர் வெள்ளாளபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 72). விவசாயி. இவருக்கு நீண்ட நாட்களாக மூட்டு வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் மூட்டு வலி குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் மன வருத்தத்தில் இருந்த ராமசாமி வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டு வாந்தி எடுத்து கொண்டு இருந்தார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து அவரது மகன் தமிழ்வாணனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டுக்கு வந்து ராமசாமியை மீட்டு ஆப்பக்கூடல் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராமசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.