75-வது சுதந்திர தின விழா: ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார்
சுதந்திர தின விழாவையொட்டி ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் தேசிய கொடியை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஏற்றி வைத்து 313 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
HIGHLIGHTS
75-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள் ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து இன்று காலையில் தேசிய கொடியை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா ஆகியோர் மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார்கள். தொடர்ந்து ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு பல்வேறு துறைகளில் ஈரோடு மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பாக பணியாற்றிய 313 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களையும், கேடயங்களையும் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுபாலன்,ஆர்.டி.ஓ. சதீஷ்குமார், தாசில்தார் பாலசுப்ரமணியம், ஏ.டி.எஸ்.பிக்கள் கனகேஸ்வரி, ஜானகிராமன், டவுன் டி. எஸ்.பி ஆனந்தகுமார் உட்பட பலர் உள்ளனர்.