ஆடி அமாவாசையை முன்னிட்டு பவானி கூடுதுறையில் புனித நீராடிய பக்தர்கள்
ஆடி முதல் அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் திரண்ட பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
HIGHLIGHTS
ஆடி மாத முதல் அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் திரண்ட பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து இன்று வழிபாடு செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் தீமைகள் விலகி நன்மைகள் பிறக்கும் என்பது நம்பிக்கை. இதையொட்டி ஆடி அமாவாசை தினமான இன்று (17-ம் தேதி) அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் கூடுதுறையில் அதிக அளவில் காணப்பட்டது.
தங்களின் முன்னோர்களுக்கு படையல் வைத்தும், திதி பிண்டம் கொடுத்தும் காவிரியில் கரைத்து கூடுதுறையில் புனித நீராடினர். தொடர்ந்து, பவானி சங்கமேஸ்வரர் வேதநாயகி, ஆதிகேசவ பெருமாளை வழிபட்டுச் சென்றனர். இதையொட்டி பவானி கூடுதுறையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், புனித நீராடும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாமல் தடுக்க தீயணைப்பு படையினர், மீனவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல், ஈரோடு கருங்கல்பாளையம் சோளீஸ்வரர்கோயிலில் வில்வேஸ்வரர், புஷ்பநாயகி அம்மனுக்கு காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் ஊற்றி வழிபாடுகள் நடைபெற்றது. பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், ஈஸ்வரன் கோயில், பெருமாள் கோயில், கொங்காலம்மன் கோயில், திண்டல் முருகன், சென்னிமலை முருகன் உள்ளிட்ட பல் வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றது. அம்மன் கோயில்களில் பக்தர்களுக்கு கூழ் காய்ச்சி வழங்கப்பட்டது.
அதேபோன்று, மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி முதல் நாளையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.