மகாளய அமாவாசை; பவானி கூடுதுறையில் கடும் போக்குவரத்து நெரிசல்
புரட்டாசி மாத மகாளய அமாவாசை தினமான இன்று, பவானி கூடுதுறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி, வழிபாடு செய்து வருகின்றனர்.
HIGHLIGHTS
புரட்டாசி மாத மகாளய அமாவாசை தினமான இன்று, ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் பரிகார வழிபாட்டுக்காக அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிய தொடங்கினார். இதனால், பரிகார மண்டபங்கள், தற்காலிகப் பரிகார கூடங்களும் நிரம்பின. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும், பிண்டம் வைத்தும் வழிபாடு நடத்திய பக்தர்கள் காவிரியில் கரைத்து சங்கமேஸ்வரரை வழிபட்டனர். மேலும், திருமண தடை, நாகதோஷம் உள்ளிட்ட பல்வேறு தோஷ நிவர்த்தி பரிகார வழிபாடுகளும் நடத்தப்பட்டன.
இவ்வழிபாட்டில் ஈரோடு மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பேருந்துகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்ததால், கூடுதுறை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பவானி-மேட்டூர் சாலையில் உள்ள அந்தியூர்பிரிவு முதல் லட்சுமிநகர் பைபாஸ் வரை, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
மேலும், பாதுகாப்பு பணியில் 50-க்கும் மேற்பட்ட பவானி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த ௨ ஆண்டுகளாக மகாளய அமாவாசை நாளில், கூடுதுறை மூடப்பட்டு புனித நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதால், எவ்வித தடையும் இன்றி பக்தர்கள் வந்து செல்வதால் கூடுதுறை பகுதி மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.