ஈரோட்டில் 100 அடி உயர பிரமாண்ட கம்பத்தில் தேசியக் கொடியேற்றிய ஆட்சியர்
Erode news, Erode news today- ஈரோடு ஆட்சியா் அலுவலக வளாகத்தில், 100 அடி உயர பிரமாண்ட கம்பத்தில் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா்.
HIGHLIGHTS
Erode news, Erode news today- ஈரோடு ஆட்சியா் அலுவலக வளாகத்தில், 100 அடி உயர பிரமாண்ட கம்பத்தில், மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒளிரும் ஈரோடு சார்பில் பவுண்டேஷன் சார்பில், சுதந்திர தினத்தையொட்டி 100 அடி உயர பிரமாண்ட கம்பம் நிறுவப்பட்டது. இதில், 30அடி அகலம், 20 அடி நீளம் அளவிலான தேசியக்கொடி ஏற்றும் விழா செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது. விழாவிற்கு, ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்து, 100 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடியை ரிமோட் மூலம் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதன், பின்னர் இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பேசியதாவது, மாவட்ட ஆட்சியருக்கு ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய இரண்டு தினங்களில் தேசியக்கொடியை ஏற்றும் வாய்ப்பு கிடைக்கும். ஈரோடு மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று இரண்டரை மாதங்களிலேயே முதல் முறையாக எனக்கு தேசிய கொடி ஏற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிலும், 100 அடி உயரத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கு தமிழ்நாடு முதல்வருக்கும், தமிழ்நாடு வீட்டுவசதித்துறை அமைச்சருக்கும், ஒளிரும் ஈரோடு அமைப்பிற்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
ஈரோடு ஆட்சியர் அலுவலகம் மாநகரின் மையப்பகுதியில் உள்ளது. 40 ஆண்டுகளாக மாவட்டம் அடைந்த வளர்ச்சியின் சின்னமாக இந்த ஆட்சியர் அலுவலகம் உள்ளது. தற்போது இங்கு 100 அடி உயர கம்பத்தில் ஏற்றப்பட்டுள்ள தேசிய கொடியை பார்க்கும் அரசு அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் நாட்டிற்கு சேவை செய்வதையும், தங்களின் கடமையையும் விளக்கும் வகையில் அமையும். தற்போது, தேசிய கொடி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அனைத்து நாட்களிலும் இரவு பகலாக இந்த 100 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி பட்டொளி வீசி கம்பீரமாக பறக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சீரமைக்கப்பட்ட பூங்காவை ஆட்சியர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, மூவர்ண பலூன்களை பறக்க விட்டார்.
இந்நிகழ்ச்சியில், முன்னதாக ஒளிரும் ஈரோடு தலைவர் சின்னசாமி வரவேற்றார். ஈரோடு எஸ்பி ஜவஹர், துணை கலெக்டர் மணிஷ், டிஆர்ஓ சந்தோஷினி சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சி கலெக்டர் வினய், ஏ.டி.எஸ்.பி.க்கள் பாலமுருகன், ராஜேந்திரன், ஒளிரும் ஈரோடு செயலாளர் கணேசன், பொருளாளர் ஸ்ரீ சிவ்குமார், பரம்பரை அறங்காவலர் ஆர்.ஜி.சுந்தரம், ஆர் பி பி குழும நிறுவனத்தின் தலைவர் செல்வ சுந்தரம், வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சந்திரசேகர், இந்தியன் பப்ளிக் பள்ளியின் தாளாளர் சிவ்குமார், அறம் அறக்கட்டளையின் தலைவர் கீர்த்தனா, ஈடிசியா தலைவர் திருமூர்த்தி, உடனடி தலைவர் சரவணன், அனைத்து வணிக சங்க சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம், செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் முருகானந்தம், மாவட்ட ஊராட்சி தலைவி நவமணி கந்தசாமி, மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், அக்னி ஸ்டீல் நிர்வாக இயக்குநர்கள் சக்தி கணேஷ், தங்கவேலு, முதலியார் எஜுகேஷனல் அறக்கட்டளை தலைவர் ராஜமாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின், இறுதியில் ஒளிரும் ஈரோடு செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.