சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு துவக்கம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் அனைத்து வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியது. இது, இன்று முதல் 6 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெற உள்ளது. அதன்படி சத்தியமங்கலம், பவானிசாகர், தலமலை, ஆசனூர், தாளவாடி உள்ளிட்ட 10 வனச்சரகங்களில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வனச்சரகர், வனக்காவலர், வனவர், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட ஆறு நபர்கள் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு மொத்தம் 400 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் மூன்று நாட்கள் பகுதி நேர கணக்கெடுப்பும், மூன்று நாட்கள் நேர்கோட்டு பாதை கணக்கெடுப்பும் நடைபெற உள்ளது.
வனவிலங்குகளின் கால்தடம், எச்சங்கள் மற்றும் நேர்காணல் விலங்குகளின் எண்ணிக்கையும் பதிவு செய்யப்படுகிறது. வனப்பகுதியில் திசைகாட்டி கருவி, பைனாகுலர் ஆகியவற்றின் உதவியுடன் பணிகள் நடைபெறுகிறது. ஆறுநாட்கள் கணக்கெடுப்பு முடிந்தவுடன் இறுதிப்பட்டியல் வனத்துறை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அதன்பிறகு அறிக்கை வெளியிடப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.