குட்டையில் நீராடிய காட்டு யானைகள்; சாலையில் குவிந்த மக்களை விரட்டிய வனத்துறை
சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வனக்குட்டையில் காட்டு யானைகள் தங்களது குட்டிகளுடன் நீராடும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த வனச்சாலை வழியாக திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். அவ்வப்போது தேசிய நெடுஞ்சாலையை யானைகள் தங்களது குட்டிகளுடன் சாலையை கடந்து செல்வது வழக்கம்.
கடந்த சில மாதங்களாக தமிழக - கர்நாடக எல்லை காரப்பள்ளம் அருகே யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும் வாகனங்களை வழிமறைப்பதும் தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில் காரப்பள்ளம் அருகே சாலை ஓரத்தில் உள்ள வனக்குட்டையில் யானைகள் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து கொண்டு நீண்ட நேரம் நீராடி விளையாடியது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தி வேடிக்கை பார்த்ததோடு தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர்.
அப்போது அங்கு வந்த வனத்துறையினர் வாகன ஓட்டிகளை யானைகளை தொந்தரவு செய்யாமல் செல்ல வேண்டும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.