பண்ணாரி சோதனை சாவடியில் மக்னா யானையின் அட்டகாசம்
சத்தியமங்கலம் அருகே பண்ணாரி சோதனை சாவடியை சூறையாடிய மக்னா யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. திம்பம் மலைப்பாதை வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. வாகனங்களை கண்காணிக்க பண்ணாரி கோவில் அருகே போலீஸ் சோதனை சாவடி, வனத்துறை சோதனை சாவடி அமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்றிரவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய மக்னா யானை ஒன்று பண்ணாரி சோதனைச் சாவடி அருகே உள்ள சாலையில் சுற்றி வந்தது. திடீரென காவல்துறையினர் சோதனைச் சாவடியை தாக்க தொடங்கியது. மேலும் அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து போக்குவரத்திற்கு இடையூறு செய்து ரகளையில் ஈடுபட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில் பண்ணாரி சோதனை சாவடியின் கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த பலாப்பழம் வாசனைக்காக மக்னா யானை சோதனை சாவடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். காட்டு யானையின் ரகளையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.