ஆசனூர் அருகே ஒற்றை காட்டுயானை சாலையில் அட்டகாசம்
சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே ஒற்றை காட்டுயானை சாலையில் அட்டகாசம்
HIGHLIGHTS

ஆசனூர் செல்லும் வழியில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை காட்டு யானை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வன சாலை வழியாக திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்த தேசிய நெடுஞ்சாலையில் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள் குட்டிகளுடன் அப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் திம்பத்திலிருந்து ஆசனூர் செல்லும் வழியில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை காட்டு யானை சாலையில் சுற்றித்திரிந்தது. அப்போது அவ்வழியாக வாகன ஓட்டிகள் திடீரென ஒற்றை யானையை பார்த்து மிரண்டனர். சாலையை கடக்கும் பொழுது அந்த ஒற்றை யானை இரண்டு நான்கு சக்கர வாகனங்களை துரத்துவதும் பயமுறுத்துவதுமாக அட்டகாசம் செய்தது.
இதனால் அவ்வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திக் கொண்டனர். நீண்ட நேரமாக ரோட்டில் அட்டகாசம் செய்த காட்டுயானை பின்னர் வனபகுதிக்குள் சென்றது. இதனையடுத்து வாகன ஓட்டிகள் புறப்பட்டு சென்றனர். வனவிலங்குகள் அடிக்கடி காட்டை விட்டு வெளியேறி சாலையில் உலாவுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் செல்ல வேண்டும் என்றும் தேவையற்ற இடங்களில் வாகனங்களை நிறுத்த கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.