ஈரோடு அருகே மழை வெள்ளம் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மீட்பு
தண்ணீரில் தத்தளித்த 10 தொழிலாளர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டு மேடான பகுதிக்கு அழைத்து வந்தனர்.
HIGHLIGHTS
பவானி அருகே மழை வெள்ளம் குடியிருப்பைச் சூழ்ந்ததால் வெளியேற முடியாமல் தவித்த தொழிலாளர்களை தீயணைப்புப் படையினர் திங்கள்கிழமை இரவு பாதுகாப்பாக வெளியேற்றினர்.
பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் திங்கள்கிழமை மாலை தொடங்கி இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பெருத்த சிரமத்துக்கு உள்ளாகினர். லட்சுமி நகர் பகுதிக்கு மழைநீர் மேடான பகுதிகளிருந்து பெருக்கெடுத்து வந்ததால், தண்ணீர் தேங்கியதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரியபுலியூர் பகுதியலிருந்து செல்லும் ஓடையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் தாழ்வான பகுதியான பூலப்பாளையம், ஆலாங்காட்டுவலசு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும், அங்குள்ள சிறுபாலத்தில் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கியது. அப்பகுதியில் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பிலும் தண்ணீர் புகுந்தது.
இதனால், வெளியேற முடியாமல் தவித்தனர். இத்தகவலறிந்த பவானி தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரில் தத்தளித்த 10 தொழிலாளர்களை மீட்டு மேடான பகுதிக்கு அழைத்து வந்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது. சித்தோடு, கவுந்தப்பாடி போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.