பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா
63 நாயன்மார் திருமேனிகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு சப்பரத்தில் வைத்து சிவனடியார்கள் திருவீதி ஊர்வலமாக எடுத்து சென்றனர்
HIGHLIGHTS
பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, 63 நாயன்மார்கள் உள்பட 96 பேரின் திருமேனிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா, கடந்த மாதம் 26ம் தேதி சங்கமேஸ்வரர் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, கோவிலில் உள்ள கொடிமரத்தில் ஈரோடு ஆதீனம் பாலாஜி சிவன் குருக்கள் தலைமையில் சித்திரை திருவிழா கொடியேற்றப்பட்டு, சங்கமேஸ்வரர் உடனமர் வேதநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
இரண்டாவது நாளாக 27ம் தேதி ஆதி கேசவப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரண்டாவது நாள் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு தினந்தோறும் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனையும், இரவு சேஷ வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெற்றது.கடந்த 28, 29 ஆகிய தேதிகளில் அபிஷேக ஆராதனையும் திருவீதி உலாவும் நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 4 நாட்களும் மாலை நேரத்தில் ஆன்மீகம் குறித்த சிறப்பு சொற்பொழிவுகள் நடந்தது.
நேற்று, ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடும் நடைபெற்றது இதில், 63 நாயன்மார்கள், அப்பர், சுந்தரர், மற்றும் மாணிக்கவாசகர், திருமுறை ஆசிரியர்கள், சந்தான குறவர்கள், சேக்கிழார் உட்பட 96 பேரின் ஐம்பொன் திருமேனிகளுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, இரவு 8 மணியளவில் 63 நாயன்மார் திருமேனிகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு சப்பாரத்தில் வைத்து, தோளில் வைத்து சிவனடியார்கள் திருவீதி ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
சங்கமேஸ்வரர் கோவிலில் இருந்து பூக்கடை வீதி வழியே வி. என்.சி. கார்னர் வழியே மீண்டும் கோவிலை வந்தடைந்தது. மே 4ம் தேதி வேதநாயகி அம்மன் உடனமர் சங்கமேஸ்வருக்கு திருக்கல்யாண உற்சவமும் திருத்தேர் ஊர்வலமும், மகா அபிஷேகமும் நடைபெற உள்ளது.
வரும் 5-ம் தேதி காலை அபிஷேக ஆராதனையும் பரிவேட்டை நிகழ்ச்சியும் சாமி புறப்பாடு மற்றும் தீர்த்த வாரியம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, 7ம் தேதி சாமிகளுக்கு அபிஷேக ஆராதனையும் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது.நேற்று நடந்த ஊர்வலத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.