அடிப்படை வசதிகள் செய்து தர வாய்ப்பில்லை: ஈரோடு மாநகராட்சி அறிவிப்பு
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வாய்ப்பு இல்லை என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் சாலை, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வாய்ப்பு இல்லை என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாநகராட்சி 5-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரனிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர். அதில், ஈரோடு மாநகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட எஸ்.கே. இந்திரன் வீதி, செந்தூர் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் 100 குடும்பங்களை சேர்ந்தவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.
எங்கள் பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் எங்கள் பகுதியில் தார் ரோடு, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பெரும் சிரமமாக உள்ளது. எனவே எங்கள் பகுதியில் தார் ரோடு, கழிவுநீர் சாக்கடை கால்வாய் வசதி மற்றும் தெருவிளக்கு, குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் அளித்துள்ள விளக்க அறிக்கையில், ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற மனைப்பிரிவில் அரசாணைப்படி, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வாய்ப்பு இல்லை. மனைப்பிரிவில் மனை ஒப்புதல் பெற்று முறையாக சாலைகளை மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டால் மட்டுமே சாலைகள் மற்றும் சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.