காதல் விவகாரத்தில் இளைஞர் மீது தாக்குதல்: சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கீழ்வாணியில் காதல் விவகாரத்தால் இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த ஆப்பக்கூடல் அருகேயுள்ள கீழ்வாணி மூங்கில்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ். பெயிண்டராக வேலை செய்யும் இவர் தனது பாட்டியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவியிடம் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மாணவி வீட்டாரின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து இளைஞர் வெங்கடேஷை கண்டித்துள்ளனர். இதனால் கடந்த 8ம் தேதி இரவு இரு தரப்பினரிடையே ஏற்பட்டதில் வெங்கடேசை மாணவியின் தந்தை மற்றும் அத்தை தாக்கியதில் தலையில் படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து வெங்கடேஷ் அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பின்னர் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்ட வெங்கடேஷ் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே வெங்கடேஷ் மீது தாக்குதல் நடத்திய மாணவியின் தந்தை, கட்டுமான தொழிலாளியான சரவணன் மற்றும் அவரது அத்தை சித்ராவை ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.