அந்தியூர் குருநாதசுவாமி கோவிலில் தேர்த்திருவிழா, கால்நடை திருவிழா நாளை தொடக்கம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் குருநாதசுவாமி கோவிலில் ஆடித்தேர்த்திருவிழா நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. விழாவையொட்டி, தென்னக அளவில் புகழ்பெற்ற கால்நடை சந்தையும் தொடங்குகிறது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் அந்தியூர் குருநாதசுவாமி கோவிலில் ஆடித்தேர்த்திருவிழா நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. விழாவையொட்டி, தென்னக அளவில் புகழ்பெற்ற கால்நடை சந்தையும் தொடங்குகிறது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. நாளை காலை 10 மணி அளவில் புதுப்பாளையம் குருநாதசுவாமி கோவில் மடப்பள்ளியில் இருந்து 60 அடி உயரம் கொண்ட மகமேறு தேரில் பெருமாள் சாமியும், மற்றொரு தேரில் குருநாதசுவாமியும், பல்லக்கில் காமாட்சி அம்மனும் எழுந்தருளுவார்கள்.
அதன் பின்னர், செண்டை மேளங்கள் முழங்க பக்தர்கள் மகமேறு தேர்களையும், பல்லக்கையும் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குருநாதசுவாமி வனக்கோவிலுக்கு சுமந்து செல்வார்கள். பகல் முழுவதும் வனக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மீண்டும் 2 மகமேறு தேர்களையும், காமாட்சியம்மன் பல்லக்கையும் பக்தர்கள் குருநாதசுவாமி கோவில் மடப்பள்ளிக்கு தோளில் சுமந்து செல்வார்கள். அதனைத்தொடர்ந்து 3 நாட்கள் அதாவது வருகிறது 12ம் தேதி வரை மடப்பள்ளியில் பக்தர்களுக்கு சாமி தரிசனம் நடைபெறும்.
குருநாதசுவாமி கோவில் திருவிழாவையொட்டி, புகழ்பெற்ற குதிரை சந்தை நாளை (புதன்கிழமை) முதல் 12ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. இக்கால்நடைச் சந்தைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களிலிருந்தும் ஏராளமான கால்நடைகள் வகற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு ரகக் குதிரைகள், காங்கயம் காளைகள், ஆந்திரத்தின் ஓங்கோல் ரக மாடுகள், அதிகப் பால் கரக்கும் ஜெர்சி ரகப் பசுக்கள், பர்கூர் மலைப்பகுதியின் பாரம்பரிய ரகமான செம்மறை மாடுகள் என ஏராளமான கால்நடைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதேபோல், திருவிழா கடைகள், ராட்டினங்களை வியாபாரிகள் அமைத்து வருகின்றனர்.
கால்நடைகளை காணவும், சாமி தரிசனம் செய்யவும் 4 நாட்களும் அந்தியூர் புதுப்பாளையத்தில் லட்சக்கணக்கானோர் கூடுவார்கள். அதனால், பவானி காவல் துணைக் கண்காணிப்பாளர் அமிர்தவர்ஷினி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும், 75-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்புப் மேற்கொள்ளப்பட உள்ளது.