ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிலப்பிரச்சினை தொடர்பாக மூதாட்டி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
HIGHLIGHTS
நிலப்பிரச்சினை தொடர்பாக ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் வாராந்திர குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள், குறைகள் தொடர்பாக கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி புதூரை சேர்ந்த பழனிசாமி மனைவி காளியம்மாள் (வயது70 )என்பவர் மனு அளிக்க வந்திருந்தார். அலுவலக வாசலில் நின்று கொண்டிருந்த காளியம்மாள் திடீர் என தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து காளியம்மாளை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மண்ணெண்ணெய் பாட்டிலையும் அவரிடம் இருந்து பிடுங்கி வீசி விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் காளியம்மாள் தனது கணவர் பழனிசாமி ஏற்கனவே இறந்து விட்டார். மகேஸ்வரி என்ற மகள் மட்டும் உள்ளார். தான் தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருவதாகவும், தனக்கு சொந்தமாக 4.28 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் 10 சென்ட் இடத்தை பக்கத்து நிலத்து காரர் தனக்கு தெரியாமல் விற்று இருக்கிறார். நிலத்தை வாங்கியவர் அங்கு கம்பி வேலி போடுவதை தெரிந்து கொண்ட பின்னர் தான் தடுத்து நிறுத்த முயற்சித்தும் முடியாததால் போலீசில் புகார் செய்ததாகவும், போலீசார் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசார் காளியம்மாளை மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திராவிடம் அழைத்து சென்றனர். மாவட்ட வருவாய் அதிகாரியிடம் காளியம்மாள் தான் எழுதி வைத்திருந்த மனுவை கொடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து போலீசார் காளியம்மாளிடம் எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயன்றது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.