கோபிசெட்டிபாளையம் அருகே நோயாளியுடன் பள்ளத்தில் பாய்ந்த ஆம்புலன்ஸ்
கோபிசெட்டிபாளையம் அருகே ஆம்புலன்சில் நோயாளியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், கட்டுப்பாட்டை இழந்து ஆம்புலன்ஸ் பள்ளத்தில் பாய்ந்ததில் நோயாளி உயிரிழந்தார்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (47). விவசாயி. இவர் சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று அவரை கோபியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அவரை அழைத்து சென்றனர். உடன், பிரகாஷின் மனைவி, அண்ணன், அண்ணன் மகன் என 3 பேர் சென்றனர். அப்போது, கோபி அருகே உள்ள சிங்கிரிபாளையம் என்ற இடத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் திடீரென சாலையோரம் உள்ள சிறிய வாய்க்காலுக்குள் பாய்ந்தது.
இந்த விபத்தில் ஆம்புலன்சின் முன்பகுதி நொறுங்கி சேதம் அடைந்தது. இந்த திடீர் அதிர்ச்சியால் பிரகாஷின் உடல் நிலை மேலும் மோசமடைந்தது.இதையடுத்து உடனே சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரகாசை வேறு வாகனத்தில் அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரகாஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட 4 பேரும் உயிர் தப்பினார். இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.