பண்ணாரி அம்மன் கோவில் அருகே சுற்றித்திரிந்த காட்டு யானையால் பீதி
சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் அருகே சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானையால் பக்தர்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
HIGHLIGHTS
சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் அருகே சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானையால் பக்தர்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இந்த யானைகள் இரவு நேரத்தில் பண்ணாரி அம்மன் கோவில் வளாகம் மற்றும் சோதனை சாவடிகள் அருகே நடமாடுவது வழக்கம்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (நேற்று) இரவு பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை யானை திடீரென பண்ணாரி கோவில் முன் மைசூரு நெடுஞ்சாலை சாலையில் அங்கும் இங்குமாய் சுற்றித் திரிந்தது. இதைக் கண்ட கடைக்காரர்கள், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், யானை அந்த வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்து நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்த வந்த சத்தியமங்கலம் வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராட்டத்துக்கு பிறகு அந்த ஒற்றை யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால், பண்ணாரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.