ஈரோட்டுக்கு போலி மது கடத்தி வந்த 7 பேர் கைது: 2,400 பாட்டில்கள் பறிமுதல்
விழுப்புரத்தில் இருந்து ஈரோட்டுக்கு போலி மது கடத்தி வந்த 7 பேர் கைது செய்யப்பட்டு ஒரு கார், ஒரு சரக்கு வாகனத்துடன், 2,400 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
HIGHLIGHTS
விழுப்புரத்தில் இருந்து ஈரோட்டுக்கு போலி மது கடத்தி வந்த 7 பேர் கைது செய்யப்பட்டு ஒரு கார், ஒரு சரக்கு வாகனத்துடன், 2,400 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு மாவட்ட மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு பவித்ரா, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் மற்றும் போலீசார் ஈரோடு-கரூர் சாலையில் உள்ள சோலார் ரவுண்டானா பகுதியில் மதுவிலக்கு போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த காரில் 384 போலி மதுபான பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த நிஜந்தன் (22), சங்கர் (34), புதுச்சேரியை சேர்ந்த ஆதவன் (47) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
இதேபோல், ஈரோடு அருகே உள்ள வெண்டிபாளையம் கட்டளை கதவணை பகுதியில் நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், டிரைவரின் பின் பக்கத்தில், 2 அடி அகலம், 7 அடி உயரத்தில் ரகசிய அறையில் 42 பெட்டிகளில் 2,016 போலி மதுபான பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கடத்தில், ஈடுபட்ட புதுச்சேரியை சேர்ந்த உதயகுமார் (வயது 42), செல்வம் (48), விக்கி என்கிற விக்னேஷ் (30), சத்தியராஜ் (31), ஆகிய நால்வரை போலீசார் கைது செய்தனர். இவ்விரு வழக்கிலும், விழுப்புரம் பகுதியில் தயாரிக்கப்பட்ட போலி மதுபானத்தை, ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.