அந்தியூர் அருகே போதை மாத்திரை உபயோகித்த இளைஞர்கள் 5 பேர் கைது
Drugs In Tamil - அந்தியூர் அருகே போதை மாத்திரை உபயோகித்த பட்டதாரி இளைஞர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
Drugs In Tamil -ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியில் போதை மாத்திரை பயன்படுத்தி போதை ஏற்றிக் கொள்ளும் நபர்களை கண்காணிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் உத்தரவிட்டார்.இதன்பேரில், நேற்று காலை ரோந்து சென்ற அந்தியூர் போலீசார், அந்தியூரிலிருந்து மலை கருப்புசாமி கோவில் செல்லும் வழியில் உள்ள மாணுவபூமி என்ற இடத்தில் கும்பலாக அமர்ந்து போதை மாத்திரைகளை கரைத்து, சிரஞ்சு வழியாக உடலில் செலுத்தி வந்த ஐந்து பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில், அந்தியூர் மற்றும் தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (23) ,சசிகுமார் (28), யுவராஜ் (30), விக்னேஷ் (27), யுவராஜ் (27) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, 5 பேரை கைது செய்த அந்தியூர் போலீசார் அவர்களிடம் இருந்து 100 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
இவர்களில், யுவராஜ் தவிர மற்ற 4 பேரும் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் என தெரியவந்தது. மேலும், இவர்களுக்கு போதை மாத்திரைகளை வாங்கி கொடுத்ததாக ஆப்பக்கூடல் சிந்தகவுண்டன் பாளையத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் மகன் பாலாஜி. தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த உத்தரமூர்த்தி என்பவர் மகன் கண்ணன் ஆகிய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.போதை மாத்திரைகளை பயன்படுத்திய ஐந்து பேரும் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2