ஈரோடு மாவட்டத்தில் 206.40 மில்லி மீட்டர் மழை பதிவு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) 206.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
HIGHLIGHTS
கோடை தொடங்கிய நாள் முதல் ஈரோடு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இடையில் அவ்வப்போது கோடை மழை பெய்தது. கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளே மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்தது. வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் பகல் நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வராமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, பவானி, அந்தியூர், கொடுமுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. பின்னர் மாலை 3.30 மணியளவில் திடீரென குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. இதையடுத்து பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.
இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. அந்தியூர் பகுதியில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியும், வீடுகளுக்குள் புகுந்தது. இதனையடுத்து, அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதேபோல், பெருந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்த காற்றினால் ஏராளமான பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தது. பெருந்துறை பவானி ரோடு காட பாளையம் எம்ஜிஆர் சாலை அண்ணா சிலை காஞ்சிக்கோவில் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோட்டோரங்களில் இருந்த ஏராளமான மரங்கள் முறிந்து ரோட்டில் விழுந்ததால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே உள்ள சக்கரப்பள்ளம் என்ற பகுதியில் காட்டாற்று வெள்ளம் தரைப்பாலத்தை மூழ்கி சென்றது. இதன் காரணமாக குரும்பூர் உள்பட பல்வேறு மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த பெயர்ந்து மற்றும் வாகனங்கள் பாலத்தை கடக்க முடியவில்லை. சுமார் 5 மணி நேரம் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
மாவட்டத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் இன்று (சனிக்கிழமை) காலை வரை பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-
ஈரோடு - 5.0 மி.மீ ,
கோபி - 7.0 மி.மீ ,
பெருந்துறை - 60.0 மி.மீ ,
தாளவாடி - 6.40 மி.மீ ,
கொடுமுடி - 31.0 மி.மீ ,
மொடக்குறிச்சி - 20.0 மி.மீ ,
கவுந்தப்பாடி - 15.60 மி.மீ ,
சென்னிமலை - 5.0 மி.மீ ,
எலந்தகுட்டைமேடு - 25.20 மி.மீ ,
பவானிசாகர் - 6.0 மி.மீ ,
குண்டேரிப்பள்ளம் - 6.0 மி.மீ ,
அம்மாபேட்டை - 19.0 மி.மீ
மாவட்டத்தில் மொத்தம் 206.40 மி.மீ மழைப்பொழிவு பதிவாகி இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.