பர்கூர் மலைப்பகுதியில் 15 வயது சிறுமிக்கு திருமணம்; 3 பேர் மீது வழக்குப்பதிவு
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக தாய் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
Erode news, Erode news today- அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தாய் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதி தாமரைக்கரை அருகேயுள்ள தாளக்கரை பகுதியில் 15 வயது சிறுமிக்கு, நேற்று (வியாழக்கிழமை) காலை திருமணம் நடைபெற்றதாக ஈரோடு மாவட்ட சமூக நல குழந்தை திருமணத் தடுப்பு அலுவலர் சண்முகவடிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் ஞானசேகரன், சுபாஷினி, தேவகி மற்றும் வருவாய்த் துறையினர் பர்கூர் போலீசார் பாதுகாப்புடன் நேரில் விசாரணை நடத்தினர். விசாரணையில், 15 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது உறுதியானது.
இதையடுத்து, சிறுமியைத் திருமணம் செய்த இளைஞர் ஜோகி (வயது 22). திருமணத்துக்கு உடந்தையாக இருந்த ஜோகியின் தாய் இதயம்மாள் மற்றும் சிறுமியின் தாய் தொட்டதாயி ஆகியோர் மீது பர்கூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டப்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.