பரிகாரத்துக்காக பாம்புவிடம் நாக்கை நீட்டி 'கடி' பட்ட விவசாயி; ஈரோட்டில் இப்படியும் ஒரு 'கூத்து'
Erode news, Erode news today-'அடிக்கடி கனவில் பாம்பு வருகிறது' என்று, பூசாரியிடம் பரிகாரம் கேட்க சென்றார் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர். அதற்கு பூசாரி, 'பாம்புவிடம் நாக்கை நீட்டி காட்டுவதே பரிகாரம்,' என்று கூற, கடைசியில் பாம்பு கடித்து அந்த விவசாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
Erode news, Erode news today- இந்த 21ம் நூற்றாண்டிலும், மூட நம்பிக்கைகளை பின்பற்றி வினோத சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. போலி சாமியார்களிடம் ஏமாறுவது.. தோஷம் கழிப்பதாக கூறி வீட்டில் உள்ள பொருட்களை களவு கொடுப்பது என அவ்வப்போது மூட நம்பிக்கைகளால் அரங்கேறும் ஏமாற்று வேலைகளை கேள்விப்படுகிறோம். மூடநம்பிக்கைக்கு எதிராக விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் விழிப்புணர்வு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களிலும், சினிமாக்களிலும் கூட வந்தாலும் இன்னும் ஒரு சிலர் ஏமாந்து விடுகின்றனர். அப்படித்தான் ஈரோட்டில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
பூசாரி சொன்னதை கேட்டு விவசாயி ஒருவர் பாம்பிடம் நாக்கை காண்பித்துள்ளார். இதில் பாம்பிடம் கடிபட்டு கடைசியில் கனவு கண்டது பலித்தது போல ஆகிவிட்டது.
கனவில் வந்த பாம்பு
ஈரோட்டை சேர்ந்த விவசாயி ஒருவரின் கனவில் அடிக்கடி பாம்பு வந்துள்ளது. பாம்புவை கண்டு அரண்டுபோன விவசாயி, அடிக்கடி நள்ளிரவில் துாக்கம் கெட்டு அவதிப்பட்டுள்ளார். ஒரு கட்டத்தில், 'கனவில் பாம்பு வருமே' என, துாங்காமல் விழித்துக்கொண்டே இருக்கும் அவலத்தில் தவித்திருக்கிறார். விடாமல் தினமும் இரவில் துரத்தும் பாம்பு கனவால், பயந்து போன அந்த 54-வயது விவசாயி, தனது மனைவியிடம், கனவில் பாம்பு வருவது பற்றி கூறியிருக்கிறார்.
ஜோதிடர் காட்டிய வழி
இதையடுத்து, இருவரும் ஜோதிடரிடம் இது குறித்து கேட்கலாம் என்று தங்களுக்கு தெரிந்த ஜோதிடர் ஒருவரை பார்த்து ஆலோசனை பெற்றனர். அந்த ஜோதிடரும், தனக்கு தெரிந்த ஒரு கோவில் பற்றியும், அங்குள்ள சாமியார், பாம்புகளை வளர்த்து வருகிறார் என்றும், அந்த பாம்புகளுக்கு பரிகாரம் செய்தால் பாவம் நீங்கிவிடும். அந்த பரிகாரத்துக்கு பின்னர், கனவில் பாம்பு வராது என்றும், தெரிவித்துள்ளார்.
பாம்புவிடம் நாக்கை நீட்டச் சொன்ன பூசாரி
இதனை உண்மை என நம்பிய அந்த விவசாயி, ஜோதிடர் கூறிய கோவிலுக்கு சென்று அங்கிருந்த பூசாரியை சந்தித்து நடந்தவற்றை கூறியிருக்கிறார். அந்த பூசாரியும், அவரை உள்ளே அழைத்து சென்று, அங்குள்ள 20-க்கும் மேற்பட்ட பாம்புகளை காட்டியுள்ளார். அதன்பின்னர் இதில், கொடிய விஷத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பைக் காட்டி, 'அதன் முன்பாக நாக்கை நீட்டி பரிகாரம் செய்யுங்கள். உங்கள் பாவம் நீங்கி விடும்,' என்று கூறியிருக்கிறார்.
பூசாரி சொல்வதை கேட்டு கொஞ்சமும் ஆபத்தை உணராமல் அப்படியே தலையாட்டிய விவசாயி, பூசாரி சொன்னபடி பாம்பு முன்பாக நாக்கை நீட்டியிருக்கிறார்.ஆனால், அடுத்த நொடியே பாம்பு, விவசாயியின் நாக்கை கடித்து விட்டது. அதிர்ச்சியடைந்த விவசாயி பதறி அலற, பதட்டமடைந்த பூசாரி, விவசாயியின் நாக்கை வெட்டியிருக்கிறார். இதனால், ரத்தம் பீறிட்டு வந்துள்ளது. சற்று நேரத்தில் அந்த விவசாயி மயக்கம் அடைந்து விழுந்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட விவசாயிக்கு தீவிர சிகிச்சை அளித்து, டாக்டர்கள் உயிரை காப்பற்றியிருக்கின்றனர்.
'பாம்பு வருவது போல கண்ட கனவு, கடைசியில் நனவாகிவிட்டதே' என்று சொல்லும் அளவுக்கு, விவசாயிக்கு நடந்த இந்தச் சம்பவம் அமைந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அந்த விவசாயி, தற்போது குணம் அடைந்து வீடு திரும்பியிருக்கிறார். அவரை சந்திக்க சென்ற உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும், 'நமட்டு சிரிப்பு'டன் அவரை நலம் விசாரித்து செல்கின்றனர்.