கிருத்திகா உதயநிதியின் அசையா சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
கிருத்திகா உதயநிதிக்கு சொந்தமான ரூ.36.3 கோடி சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
HIGHLIGHTS

உதயநிதி, கிருத்திகா உதயநிதி
சென்னை லைக்கா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அண்மையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் நடிகரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதியுடன் தொடர்புடைய 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனத்துடன் கோடிக்கணக்கான பண பரிமாற்றம் நடந்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகின.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்லல் குரூப்ஸ் மற்றும் உதயநிதி அறக்கட்டளை தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சென்னை வேளச்சேரியில் உள்ள உதயநிதியின் நெருங்கிய நண்பர் வீட்டிலும், எழும்பூர் எத்திராஜ் சாலையில் உதயநிதியின் ரசிகர் மன்றம் மற்றும் அறக்கட்டளை நிறுவனத்தினை நடத்திவரும் வழக்கறிஞர் பாபு என்பவரது வீடு மற்றும் அவரது அலுவலகத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாபுவை நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் கடந்த 17-ம் தேதி, அவர் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகி விளக்கமளித்திருந்தார்.
இந்த நிலையில், அமலாக்கத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில், உதயநிதி அறக்கட்டளையில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதிக்கு சொந்தமான ரூ. 36.3 கோடி மதிப்பிலான சொத்துக்களை கடந்த 25-ம் தேதி முடக்கி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனையைத் தொடர்ந்து திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நேற்றைய தினம் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.