திண்டுக்கல்லில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 பேர் போஸ்கோ சட்டத்தில் கைது
திண்டுக்கல் : கோவை மாவட்டம் துடியலூர் அருகேயுள்ள கண்ணப்பநகரை சேர்ந்தவர் கோகுல்(22). இவரும், 17 வயது சிறுமியும் காதலித்தனர். அதை பெற்றோர் எதிர்த்ததால் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்லுக்கு வந்தனர். அவர்களுக்கு உதவியாக 16 வயது சிறுவன், 17 வயது சிறுமி ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் உடன் வந்தனர். இவர்கள், திண்டுக்கல்லை சேர்ந்த சிலரின் உதவியுடன் மொட்டணம்பட்டி எம்.ஜி.ஆர்.நகரில் பதுங்கி இருந்தனர். மேலும் காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே காதல் ஜோடியின் இருப்பிடத்தை அறிந்து துடியலூர் போலீசார் திண்டுக்கல்லுக்கு விரைந்து வந்தனர்.
ஆனால், போலீசார் வருவதை அறிந்த காதல் ஜோடி தப்பிவிட்டது. அதேநேரம் காதல் ஜோடிக்கு உதவிய சிறுமி, சிறுவன் உள்பட 5 பேர் போலீசாரிடம் சிக்கினர். இதைத் தொடர்ந்து 5 பேரையும் பிடித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் சிறுமியுடன் சிக்கிய பேகம்பூர் பகுதியை சேர்ந்த முகமதுஅலி ஜின்னா(26), ஆர்.வி.நகரை சேர்ந்த அலெக்சாண்டர் (22) ஆகியோர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.