பலத்த மழையால் திணறிய திண்டுக்கல் மாநகரம்: மழை நீர் தேங்கியதால் மக்கள் அவதி
தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்ததால் திண்டுக்கல் மாநகரமே மழை நீரில் மூழ்கியது
HIGHLIGHTS
தென் மாவட்டங்களில் 26 மற்றும் 27 ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் கன மழை பெய்யும் என சென்னை வானிலை அறிக்கை அறிவித்திருந்தது.இந்நிலையில் திண்டுக்கல்லில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்ய துவங்கியது.
தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்ததால் திண்டுக்கல் மாநகரமே மழை நீரில் மூழ்கியது. மைய பகுதியான வெள்ளை விநாயகர் கோவில், சர்ச் பில்டிங், அபிராமி அம்மன் கோவில் , மணிக்கூண்டு பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது.
மாநகராட்சியின் மெத்தன போக்கினால் மழை நீர் வெளியே செல்ல முடியாமல் தேங்கி உள்ளதால் பொதுமக்கள், வியாபாரிகள் மிகவும் பாதிப்படைந்தனர். மேலும் திண்டுக்கல் அருகே உள்ள தோமையார்புரம் பகுதியில் தோல் கழிவு நீருடன் மழை நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
மேலும் நாகல் நகர் பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் ஒத்தக்கண் பாலம், பாரதிபுரம் பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மாநகராட்சி அதிகாரிகள் மழை கால முன்னெச்சரிக்கை எதுவும் எடுக்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.