எதிர்பார்த்திராத வெற்றியை அதிமுக பெறும்: முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்
திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை தற்போது வரை நிறைவேறாமல் இருப்பதை பொதுமக்களிடம் கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும்
HIGHLIGHTS
திமுக 7 மாத ஆட்சி காலத்தில் மக்களின் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். பொங்கல் தொகுப்பு வழங்கியதற்கு பின்னால் இந்த ஆட்சி மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கிறது. இதன் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக யாரும் எதிர்பார்த்திராத மிகப் பிரம்மாண்டமான வெற்றியை பெறப்போகிறது என்றார் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கிழக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட பழனி, கொடைக்கானல் ஆகிய 2 நகராட்சிகள் நத்தம், சின்னாளப்பட்டி, பண்ணக்காடு, அய்யம்பாளையம், கன்னிவாடி, சேவுகம்பட்டி உள்ளிட்ட 17 பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட கழக அலுவலகத்தில், கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா. விசுவநாதன் தலைமையில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், சட்டமன்ற தேர்தலின் போது திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை தற்போது வரை நிறைவேற்றாமல் இருப்பதை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகளை சேகரிப்பது. அதிமுக ஆட்சி காலத்தில் செய்த நலத்திட்டங்களை மக்களுக்கு எடுத்துக்கூறி வாக்குகளை சேகரிப்பது குறித்த ஆலோசனைகளை முன்னாள் அமைச்சர் நத்தம் இரா விசுவநாதன் வழங்கினார். இதில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நத்தம், ஆத்தூர், பழனி, நிலக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
.