திண்டுக்கல்லில் சட்டக்கல்லூரி மாணவர் ஓடையில் மூழ்கி பலி
திண்டுக்கல் நீர் நிலையில் மேலும் கல்லூரி மாணவர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் கருப்பணன் மகன் தங்கபாண்டி (வயது 19). இவர் தனது உறவினர் வீட்டில் தங்கி மதுரை அரசு சட்டக்கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்துள்ளார். தனது நண்பர்களுடன் இன்று காலை தனது மோட்டார் சைக்கிள் கழுவுவதற்காக கல்லம்பட்டி அருகே உள்ள சிறுமலை ஓடைக்கு சென்றுள்ளனர்.
அங்கு வண்டியை கழுவிவிட்டு நண்பர்கள் ஐந்து பேருடன் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது, தங்கபாண்டியன் அவரது நண்பர் சிங்கராஜூம் சேற்றில் சிக்கிக் கொண்டு மூழ்கினர். இதில் சிங்கராஜை நண்பர்கள் காப்பாற்றி விட்டனர். தங்கபாண்டி நீரில் மூழ்கி உயிரிழந்தார். உயிரிழந்த தங்கபாண்டியனின் உடலை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
குளங்களில் அங்கங்கு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யாமல் அப்படியே விட்டு விட்ட காரணத்தினால் சமீபத்தில் பெய்த மழையால் பள்ளங்களில் மழைநீர் அதிகளவில் தேங்கி உள்ளது. குறிப்பாக சேறும் சகதியும் நீருக்கு அடியில் உள்ளது. இதை அறியாத இளைஞர்கள் சிக்கிக்கொள்கின்றனர். உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கிறது.
கல்லூரி மாணவன் இறப்பு குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீர்நிலைகளில் மணல் அள்ளும் பொழுது அதிக பள்ளங்கள் ஏற்படுவதால், தொடர்ந்து நீர்நிலைகளில் மாணவர்கள் மூழ்கி உயிரிழந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை மாவட்ட நிர்வாகம் முறைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.