மத்திய அரசை கண்டித்து அரூரில் எல்ஐசி ஊழியர்கள் நூதன போராட்டம்
எல்ஐசி பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசை கண்டித்து, அரூரில் ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
மத்தியில் ஆளும் பாஜக அரசு எல்ஐசி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை நடப்பு நிதி ஆண்டிற்குள் பங்கு சந்தையில் பட்டியலிடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசின் இந்த முயற்சிக்கு, அனைத்து தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், அரசின் இந்த முயற்சியை தேச நலனுக்கும், பாலிசிதாரர்கள் நலனுக்கு முற்றிலும் எதிரானது என்று பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.
தொடர்ந்து எல்ஐசி நிறுவனத்தை தனியார் மையப்படுத்தும் முயற்சியின் முதல் படி என்றும், ஊழியர்கள் சங்கங்கள் கருதுகின்றனர். கடந்த மார்ச் 5ம் தேதி டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியிலும் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து கிளை அலுவலகம் முன்பு பங்கு சந்தை விற்பனை எதிர்த்து இன்று மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து அரூர் கிளை அலுவலகத்தில் கிளைத்தலைவர் நரசிம்மன் தலைமையில், மெழுகுவர்த்தி ஏந்தி அலுவலக நுழைவுவாயில் முன்பு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மத்திய அரசை கண்டித்து ஊழியர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் முதல் நிலை அதிகாரிகள் வளர்ச்சி அதிகாரிகள் முகவர்கள் பாலிசிதாரர்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் எல்ஐசி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.