அரூர் வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.42 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 1100 மூட்டை பருத்தி ரூ.42 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது.
HIGHLIGHTS
தருமபுரி மாவட்டம், அரூர் கூட்டுறவு வேளாண்மை விற்பனை கடன் சங்கத்தில் வாரந்தோறும், திங்கட் கிழமைகளில் பருத்தியும், வியாழக்கிழமை கொப்பரை தேங்காயும், வெள்ளி கிழமைகளில் மஞ்சளும் ஏலம் விடப்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் பயிரிடப்படும் பருத்தி, மஞ்சள் மற்றும் கொப்பரை தேங்காய்களை எடுத்து வந்து விற்பனை செய்து விட்டு பணத்தை பெற்று செல்கின்றனர்.
இதில் அரூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த விவசாயிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் பருத்தி விவசாயிகள் எடுத்து வந்த 1100 பருத்தி மூட்டை ரூ.42 இலட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
இதில் ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால், ரூ.9,109 முதல் ரூ.10,996 வரையிலும், வரலட்சுமி எம்சிஎச் ரகம் குவிண்டால் ரூ.8,900 முதல் 11,209 வரை ஏலம் போனது. கடந்த வாரத்தை விட, பருத்தி வரத்து குறைந்து. ஆனால் விலை அதிகரித்து விற்பனையானது.
கடந்த சில வாரங்களில் 2000 மூட்டை வரை வந்திருந்த பருத்தி, தற்போது குறைந்துள்ளது. மேலும் அடுத்த குறைய வாய்ப்புள்ளதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.