நோய் பரப்புகிறதா தருமபுரி அரசு மருத்துவமனை? வளாகத்தினுள் மருந்து கழிவு கொட்டப்படும் அவலம்!
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக்கழிவுகளால், துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
HIGHLIGHTS
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் உள் நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் என்று தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் வந்து செல்கின்றனர். தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக இங்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
ஆனால், நோயை குணப்படுத்த வேண்டிய தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையோ, நோய் பரப்பும் மையம் போல் மாறி வருகிறது. மருத்துவமனையில் சேகரமாகும் மருத்துவக் கழிவுகளை, அதே வளாகத்தில் கொட்டுகின்றனர். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட மருந்து பாட்டில்கள் மற்றும் மருத்துவக் கழிவுகள், வளாகத்தில் மலை போல் குவிந்துள்ளன.
கொரோனா முகக்கவசம் உள்ளிட்டவை என இந்த மருத்துவக்கழிவுகளால், சிகிச்சைக்கு வருவோருக்கு பல நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள், சுகாதாரத்துறையினர், மருத்துவமனை நிர்வாகம் உள்ளிட்டவை உடனடியாக தலையிட்டு, வளாகத்தில் உள்ள மருந்து கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்ற வேண்டும் என,பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.