கடலூர் அருகே தறி கெட்டு ஓடிய கார் மோதி 2 பேர் பலி- பரபரப்பு வீடியோ காட்சி
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே தறிகெட்டு ஓடிய கார் மோதியதில், சம்பவ இடத்திலேயே 2 பெண்கள் பலியானார்கள்.
HIGHLIGHTS
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த, நெய்வேலி இந்திராநகர் சென்னையில் இருந்து கும்பகோணம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இச்சாலையில் சென்னையிலிருந்து அக்பர் பாஷா என்பவர், அதி வேகமாக காரினை ஓட்டிக்கொண்டு, தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது, கார் தனது முழுக் கட்டுப்பாட்டையும் இழந்து, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு பேர்களை தூக்கி எறிந்துவிட்டு, சாலையோரம் பழக்கடை, பூக்கடை வைத்திருந்த நபர்கள் மீது பயங்கரமாக மோதி நின்றது.
இதில் சம்பவ இடத்திலேயே நெய்வேலி மாற்று குடியிருப்பு பகுதியை சேர்ந்த வனிதா மற்றும் முத்தம்மாள் துடிதுடித்து இறந்தனர். மேலும் கார் மோதியதில் ஜான்சி என்ற சிறுமி உட்பட, ராணி, தங்கம், சின்னசாமி, குமரேசன் ஆகிய ஐந்து நபர்களுக்கு, தலை, கை கால்களில் முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக நெய்வேலி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், படுகாயமடைந்த கார் டிரைவர் அக்பர் பாஷா உட்பட ஐந்து நபர்களையும் சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கார் விபத்தில் உயிரிழந்த வனிதா மற்றும் முத்தம்மாள் உடல்கள் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து நெய்வேலி காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவ்விபத்து குறித்து சி.சி.டி.வி. காட்சி வெளியாகியுள்ளது. அதில் அதி பயங்கரமாக வரும் காரானது, சாலையோரம் நின்று கொண்டிருந்த இரண்டு பேர்களை தூக்கி வீசிவிட்டு செல்லும் காட்சி நெஞ்சை பதற காட்சியாக அமைந்துள்ளது. இச்சம்பவத்தால் நெய்வேலி பகுதியில் பெரும் சோகம் நிலவுகிறது.