கடலூர் மாநகராட்சி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: அதிர்ச்சியில் திமுகவினர்
கடலூர் மாநகராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து சீட் கிடைக்காத திமுகவினர் கட்சி அலுவலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு
HIGHLIGHTS
கடலூர் மாநகராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் 45 வார்டுகளை உள்ளடக்கிய நகர மன்ற உறுப்பினர்களுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியானது. இந்நிலையில் முன்னதாக அதற்கான உத்தேச பட்டியல் சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில் சீட் கிடைக்காத கடலூர் 29வது வார்டு பகுதியைச் சேர்ந்த திமுகவினர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் பணம் பெற்றுக் கொண்டு அவர்களது ஆதரவாளர்களுக்கு மட்டும் சீட் வழங்கி இருப்பதாகவும், மாற்று கட்சியில் இருந்து புதிதாக கட்சியில் இணைந்து உள்ள நபர்களுக்கும் சீட் வழங்கி இருப்பதாகவும் குற்றம் சாட்டி கடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி இல்லத்தின் முன்பு குவிந்தனர்.
இல்லத்தின் எதிரே கூச்சலிட்ட நிலையில் கடலூர் பாரதி சாலையில் உள்ள திமுக நகர அலுவலகம் முன்பு கடலூர் 5வது வார்டு பிரதிநிதிகள் திரண்டு அவர்களது ஆதங்கத்தை வெளிபடுத்தினர். திமுகவின் உத்தேச பட்டியல் வெளியான நிலையில் திமுகவின் உள்கட்சி விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது
கடலூர் சட்டமன்ற உறுப்பினரது ஆதரவாளர்களுக்கும், கடலூர் நகர செயலாளர் கே.எஸ் ராஜாவின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிகழ்வு நிலவி வரும் சூழ்நிலையில் எம்எல்ஏவின் ஆதரவாளர்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு சீட்டு வழங்குவதாக நேற்று முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு 45வது வார்டு சேர்ந்த வெங்கடேசன் புகார் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.