கடலூரில் மாற்றுத்திறனாளிகள் பேரணியாக வந்து ஆர்ப்பாட்டம்
கடலூரில் மாற்றுத்திறனாளிகள் பேரணியாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் நல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தங்கள் கோரிக்கைகளை பதாகைகளை கையில் ஏந்திய வண்ணம் பேரணியாக வந்தனர்.
மாற்றுத்திறனாளிகள் நிரந்தரமாக தங்கிவிட ஏதுவாக தங்களுக்குள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமத்துவபுரம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் சுய தொழில் தொடங்க எந்தவித நிபந்தனையும் இன்றி, சொத்து பாதுகாப்பு கோராமல் வங்கிகளில் நிதி உதவி வழங்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் சிறப்பு நடவடிக்கைகள் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாத உதவித் தொகையை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் அனைத்து நாட்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்கிட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அளித்தனர்.