கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது.
HIGHLIGHTS

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, மேலும் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் விதமாக தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கட் கிழமை தோறும் நடத்தப்படும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு காணொலி காட்சி மூலமும், ஆட்சியர் அலுவலகம முன்பு புகார் பெட்டிகள் வழியாகவும் மனுக்கள் பெறப்பட்டு வந்தன.
இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறையத் தொடங்கி உள்ள நிலையில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. அலுவலர்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் மனு அளிக்க வரும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் செவிலியர்கள் முன்னிலையில் தடுப்பூசி முகாம் ஒன்றை தயார் செய்து இருந்தனர். புகார் மனுக்களை அளித்து வந்த பொதுமக்கள் பலரும் தடுப்பூசி செலுத்தி சென்றனர்.