சென்னையில் அதிகரிக்கும் கொரோனா: மருத்துவமனைகளுக்கு கடும் எச்சரிக்கை
கொரோனா நோயாளிகள் விவரம் தராத தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
HIGHLIGHTS
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியது. இதைத்தொடர்ந்து, மனித உயிர்களை காவு வாங்கிய கொரோனா வேகம் குறைந்தது. இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. தமிழகத்தில் புதிதாக 596 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 295 பேர், செங்கல்பட்டில் 122 பேர், கோவையில் 31 பேர் உள்பட 26 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகி இருந்தது. தமிழக தலைநகர் சென்னையிலும் கொரேனா தொற்று அதிகரித்து வருகிறது. தனியார் மருத்துவமனைகள் கொரோனா தினசரி விவரங்களை அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனியார் மருத்துவமனைகள் கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்தால், அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தினால் தகவல் அளிக்க வேண்டும் என்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோரின் விவரங்களையும் மாநகர நல அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.