கோவையில் மழை நீரில் அடித்து வரப்பட்ட வெள்ளை நாகம்
மழை நீரில் அடித்து வரப்பட்ட வெள்ளை நாகபாம்பை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விட்டனர்
HIGHLIGHTS
கோவை மாவட்டத்தில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் வெயில் இருந்தாலும், மாலை நேரங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாலை நேரங்களில் குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்டம் குறிச்சி சக்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது வீட்டின் முன்பகுதியில் மழை நீரில் அடித்து வரப்பட்ட வெள்ளை நாகம் ஒன்று இருந்தது. பாம்பை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து அதனை பிடித்து செல்லுமாறும் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினருக்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினர் ஆனந்த் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு சுமார் 5 அடி நீளமுள்ள வெள்ளை நிற நாகம் இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த வெள்ளை நிற நாகப்பாம்பை காயமின்றி பத்திரமாக பிடித்து கோவை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
வனத்துறையினர் அந்த வெள்ளை நிற நாகத்தை அடர் வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர். விடுவிக்கப்பட்ட அந்த பாம்பு வனப்பகுதிக்குள் சென்றது.
அல்பினோ கோப்ரா என்ற வகையை சேர்ந்த இந்த நாகப்பாம்பு மரபணு பிரச்சினை காரணமாக வெள்ளை நிறத்தில் இருப்பதாகவும், இது போன்ற மரபணு மற்றும் நிறமிகளில் இருக்கும் பிரச்சினைகள் இருக்கும் பாம்புகள் வெள்ளை நிறத்தில் இருக்கும் என்று வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.