ஆழியாறு மற்றும் அமராவதி அணையிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு
ஆழியாறு மற்றும் அமராவதி அணையிலிருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறந்து விடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது
HIGHLIGHTS
தமிழக நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா வெளியிட்ட செய்திக்குறிப்பில், கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு பழைய ஐந்து வாய்க்கால்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு முதல் போக பாசனத்திற்கு நாளை முதல் 15.10.2022 முடிய தொடர்ந்து 152 நாட்களுக்கு ஆழியாறு அணையிலிருந்து 1205 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டத்திலுள்ள 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்
அதேபோல் திருப்பூர் மாவட்டம், அமராவதி அணை பழைய பாசனத்திற்குட்பட்ட முதல் எட்டு பழைய இராஜ வாய்க்கால்களின் (இராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு) பாசனப் பகுதிகளுக்கு நாளை முதல் 28.09.2022 வரை 80 நாட்கள் தண்ணீர் திறப்பு 55 நாட்கள் தண்ணீர் அடைப்பு என்ற அடிப்படையில் முதல் போக பாசனத்திற்காக அமராவதி அணையிலிருந்து 2074 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்படும். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் 7520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்