பில்லூர் மூன்றாம் குடிநீர் திட்டம். ஜூனில் சோதனை ஓட்டம்
பில்லூர் 3ம் குடிநீர் திட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஜூன் இரண்டாம் வாரத்தில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
HIGHLIGHTS
கோவை மாநகராட்சி நூறு வார்டுகளில், 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இது தவிர, தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள், கடைகள் என பல்வேறு இடங்களுக்கு தினமும், 265.70 எம்.எல்.டி., குடிநீர் தேவைப்படுகிறது.
கோவை மாநகராட்சியின் குடிநீர் தேவையை சிறுவாணி, ஆழியாறு, பில்லூர் உள்ளிட்ட அணைகள் பூர்த்தி செய்கின்றன. ஆயினும் கோவை மாநகராட்சியின் குடிநீர் தேவையை முழுவதுமாக தீர்க்க முடியவில்லை. அதனால் பில்லூர், 3ம் குடிநீர் திட்ட பணிகள் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தின்படி, 779 கோடி ரூபாய் மதிப்பில் மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் பரிசல் துறை, மருதூர் ஊராட்சி, தண்டி பெருமாள்புரம், கட்டாஞ்சி மலை ஆகிய இடங்களில் கட்டுமான மற்றும் குடிநீர் குழாய்கள் பதித்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை ஜூன் இரண்டாம் வாரத்துக்குள் முடித்து, சோதனை ஓட்டம் மேற்கொள்ளும் விதத்தில் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் பரிசல் துறை பகுதிகளில், 134 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தலைமை நீரேற்று நிலையம் கட்டுமான பணி தற்போது, 95 சதவீதமும், மின்சார இணைப்புகள் பணி 80 சதவீதமும் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருதூர் ஊராட்சி, தண்டி பெருமாள் புரம் பகுதியில், 104.90 கோடி ரூபாய் மதிப்பில், 178 எம்.எல்.டி., குடிநீர் சுத்திகரிப்பு நிலைய வடிவமைப்பு மற்றும் கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்பகுதியில், 62 கோடி ரூபாய் மதிப்பில், 900 மீட்டர் தொலைவுக்கு சுரங்கம் அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.
தற்போது, பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பில்லூர் 3ம் குடிநீர் திட்டத்துக்காக ராட்சத குழாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இத்திட்டத்துக்காக, 35.5 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம், 121 ஏக்கர் தனியார் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. சுமார், 300 பேரிடம் பத்திரப்பதிவு முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலம் கையகப்படுத்தும் பணிகள் சட்டப்படி நடைபெற உள்ளன.
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், கோவையின் குடிநீர் தேவை பெருமளவில் தீர்க்கப்படும்