கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் இலவச வீட்டு மனை கேட்டு திரண்ட பொதுமக்கள்
இலவச வீட்டுமனை கேட்டு கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது
HIGHLIGHTS
கிணத்துக்கடவு அருகே செட்டியக்கபாளையம், பட்டணம், நல்லட்டிபாளையம், முள்ளுப்பாடி, இம்மிடிபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கிணத்துக்கடவு பேருந்து நிறுத்தம் அருகே திரண்டு வருவாய் துறையினரை கண்டித்து கோஷமிட்டனர்.
உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற காவல்துறையினர் அவர்களது குறைகளை தாலுகா அலுவலகத்தில் வருவாய் துறையினரிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினர். அதை ஏற்று பொதுமக்கள் கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்திற்கு சென்றனர்.
அங்கு ஜமாபந்தி நடைபெற்றதால் பொதுமக்கள் திரண்டு வந்ததும் தாலுகா அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. உடனே காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டி, உதவி காவல் ஆய்வாளர்கள் ஜெகதீசன், செந்தில்குமார் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்களிடம் கிணத்துக்கடவு வட்டாட்சியர் சிவகுமார் கூறுகையில், இலவச வீட்டு மனை வழங்குவது குறித்து விசாரணை நடத்தி இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அது முடிந்ததும் முன்னுரிமை அடிப்படையில் இலவச வீட்டு மனை வழங்கப்படும் என்றார்.
ஆனால் அவரிடம் பொதுமக்கள் கூறுகையில், பட்டணம் பகுதியில் இலவச வீட்டு மனை கொடுத்த இடத்தில் பலர் வீடு கட்ட வில்லை. அங்கு எங்களுக்கு நிலத்தை வழங்க வேண்டும். 8 ஆண்டுகளாக மனு கொடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. நல்லட்டிபாளையம், தேவணாம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் நிலம் உள்ளது. அதை ஆய்வு செய்து எங்களுக்கு இடம் தர வேண்டும் என்றனர்.
இதையடுத்து பொதுமக்கள் மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்சை சந்தித்து தங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.
அதை கேட்ட மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடம் குறித்து விவரங்களை வருவாய் துறையினரிடம் கேட்டறிந்து ஆவணங்களை பார்வையிட்டார்.
அதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார். அதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.