/* */

மதுக்கரை அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்.. "நட்பூ" போற்றும் விழா..!

ஈகோவும், சுய கெளரவமும் இல்லாத பள்ளிக்காலம் என்றோ ஒருநாள், மலரும் நினைவுகளின் பொற்காலம். வாழ்வில் ஒரு முறை மட்டுமே வரும் வசந்தகாலம். அந்த காலத்திற்கு நாம் பின்னோக்கி செல்ல நினைவுகளாலும், முன்னாள் மாணவர் சந்திப்புகளாலும் மட்டுமே முடியும். அதை நிரூபித்த விழா இது..!

HIGHLIGHTS

மதுக்கரை அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்.. நட்பூ போற்றும் விழா..!
X

31 வது ஆண்டான 2022 ல், இரண்டாம் சந்திப்பு நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி ஏற்படுத்திய ஒரு குரூப் போட்டோ. மலரும் நினைவுகளுடன்... கோவை, மதுக்கரை அரசு உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவ-மாணவியர்.

ஆம்...! எத்துணை ஆண்டுகாலம் ஆனாலும் அப்போதுதான் செடியில் பூத்த புத்தம் புதுமலர் போல வாசம் தரக்கூடியது, நட்பூ மட்டுமே. அதுவும் பள்ளி காலம் என்பது கள்ளம், கபடமற்றது. அந்த காலத்திற்கு நம்மை திரும்பவும் கைப்பிடித்து கூட்டிச் செல்வது தான் பள்ளி பழைய மாணவ-மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி. இந்த சந்திப்பில் மலரும் நினைவுகள் மணம் வீசும். கடந்த கால சம்பவங்களை கனத்த இதயத்தோடு பேசும்.

அதுவும் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்-ஆசிரியைகள் கடவுளர்களின் வரிசையில் வைத்து கையெடுத்து தொழத் தக்கவர்கள். அதனால் தான் மாதா, பிதா, குரு என சொல்லி இதற்கு பின்னர் தான் தெய்வத்தை சொல்கிறார்கள். கண்ணால் பார்க்க கூடிய கடவுள்களான, ஆசிரியர்களை போற்றும் நாளாகவே நிகழ்கிறது, ஒவ்வொரு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பும்!

கோவை மாவட்டம் மதுக்கரை மார்க்கெட் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசினர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வந்தது. இந்தப்பள்ளி வளாகம் தற்போது புதிய கட்டிடத்தில் மதுக்கரை வட்டாட்சியர் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.

30 வருடத்திற்கு முன்பு பள்ளியில் இருந்து 1 கி.மீட்டர் தூரத்தில் இருந்த மைதானத்தில் தற்போது புதிய மாடி கட்டிடம் கட்டப்பட்டு அங்கு தற்போது அரசு பள்ளி இடம் மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. கடந்த 1990-91 ஆம் ஆண்டுகளில் 10 ம் வகுப்பு படித்த பழைய மாணவர்கள் 30 வது ஆண்டான 17-1-2021 ல் முதல் சந்திப்பு நிகழ்ச்சியை கொரோனா இடர்ப்பாட்டுக்கு இடையிலும் நடத்தினர்.

இந்த 30-வது ஆண்டின், முதல் சந்திப்பு நிகழ்ச்சி கோவை ஈச்சனாரி விநாயகர் கோவில் எதிர்ப்புறம் உள்ள டி.எஸ்.ஆர் திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டது. முதல் நிகழ்வாக கேக் வெட்டி மகிழ்ச்சியை அனைவரும் இனிப்பாக கொண்டாடினர்.

இந்நிகழ்வில் அப்போதைய பாட்டு டீச்சர் மகனும், முன்னாள் மாணவருமான ரவிச்சந்திரன் பங்கேற்று, திருப்பாவை-மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவாய் என்னும் பாடலை பாடி பழைய பள்ளிக்கால நினைவுகளை கண் முன்பு கொண்டு வந்தார். இதையடுத்து இசை நாற்காலி போட்டி நடத்தப்பட்டு அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ரமேஷ்பாபு, தர்மராஜ், நிர்மலா, கிருஷ்ணகுமார், மகாதேவன் ஒருங்கிணைத்து நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, மீண்டும் 2022,31வது ஆண்டில் இரண்டாவது சந்திப்பு நிகழ்ச்சி கோவை குரும்பபாளையம் பிரிவில் முன்னாள் மாணவர் லோகநாதன் இல்ல வளாக பந்தலில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை முன்னாள் மாணவர்கள் ரமேஷ்பாபு, தர்மராஜ், நிர்மலா, கிருஷ்ணகுமார், சக்திவேல், வெங்கடேஷ் ஒருங்கிணைத்து நடத்தினர். கேக் வெட்டி அனைவரும் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

நடிகர்கள் நம்பியார், வீரப்பா, பாலையா, சிவாஜி கணேசன், ரகுவரன், சத்தியராஜ் மற்றும் கிருபானந்த வாரியார் உள்ளிட்ட பிரபலங்கள் குரல்களில் மதுக்கரை மிமிக்ரி கணேஷ் பேசி அசத்தினார். கவிஞரும் பத்திரிக்கையாளருமான ஆர்,கே.பூபதி, பள்ளி சம்பவங்களை கவிதையாக படித்தார். அப்போது, மாணவப்பருவத்தின் குறும்புகளையும், விளையாட்டாய் போட்ட சண்டைகளையும், பிறகு சட்டென மறுநொடியே, ஏற்பட்ட சமாதானங்களையும் விவரித்தார்.

முன்னாள் மாணவியும், தற்போது கோவை மாவட்டம், பேரூர் காவல்நிலையத்தின் சிறப்பு உதவி ஆய்வாளர் வசந்தி, பத்திரிக்கையாளர் ஆர்.கே.பூபதி உள்பட முன்னாள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர். மதுக்கரை மின்சார வாரியத்தில் பணியாற்றும் முன்னாள் மாணவர் புஷ்பராஜ் மற்றும் பத்திரிக்கையாளரும் ஊடகவியலாளருமான ஆர்.கே.பூபதி ஆகியோர் பள்ளி ஆண்டு விழாவில் அரசியல்வாதி- நிருபர் என மேடையில் அரங்கேற்றம் செய்த நாடகம், மாறுவேடப் போட்டி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தற்போது ஆசிரியர் பணியில் உள்ள முன்னாள் மாணவர் முருகேசன், குறத்தி வேடமிட்டு முதல் பரிசு பெற்றதை நினைவு கூர்ந்தனர்.

மேலும் துபாய் நாட்டில் பணிபுரியும் முன்னாள் மாணவர் மகாதேவன், அமெரிக்காவில் பணிபுரியும் முன்னாள் மாணவர் டேனியல் பிரான்சிஸ் மற்றும் நவுசாத் ஆகியோர் வீடியோ கால் மூலம் நினைவுகளை பகிர்ந்தனர். இந்நிகழ்வில் மாணவர் பருவத்தில் தாங்கள் பழகிய மறக்க முடியாத நிகழ்வுகள், ஆசிரியர்கள் அப்போது தந்த அறிவுரைகள், தங்கள் தற்போதைய தொழில், குடும்பம், பணி உள்ளிட்ட விவரங்களை மேடையில் பரிமாறி அறிமுகப்படுத்தி கொண்டனர்.

புகைப்பட ஒருங்கிணப்பு ஏற்பாடுகளை முன்னாள் மாணவரும் மதுக்கரை மார்க்கெட் அம்மன் ஸ்டுடியோ உரிமையாளருமான நந்தகுமார் முன்னின்று கவனித்தார். வரவு-செல்வு அறிக்கையை நிர்மலா வாசித்தார். பேனர் ஏற்பாடு செய்த கிருஷ்ணகுமாருக்கும், நிகழ்ச்சிக்கு இடம் அளித்த லோகநாதனுக்கும் நன்றியும் பள்ளி முன்னாள் மாணவி கீதா, தற்போது தான் படித்த மதுக்கரை அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி படித்த பள்ளிக்கு பெருமையும் புகழும் சேர்த்து வருவதற்கு பெரிதும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. துவக்கத்தில், முன்னாள் மாணவர் மதுக்கரை மதுரா புண்ணிய டிரஸ்ட் மாணிக்கம் ஏற்படுத்திய சிறிய வாட்ஸ்அப் குழு தான் 30-ஆண்டுக்கு முன் பிரிந்தவர்கள் அனைவரும், மீண்டும் சந்திக்க காரணமாகியுள்ளது என நன்றி கூறப்பட்டது.

1990-91 ஆம் ஆண்டில் 10 ம் வகுப்பு ஏ பிரிவு முதல் ஈ பிரிவு வரை படித்த மாணவ-மாணவியர்களில் 118 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர் எனவும், மீதம் உள்ள நண்பர்களையும் விரைவாக கண்டறிந்து குழுவில் இணைக்க வேண்டும்; பள்ளியின் நலனுக்கு தனியாக நிதி திரட்டி அளிப்பது, கடந்த முறை பங்கேற்று இந்த முறை விடுபட்டவர்கள் இணைப்பது; அடுத்த முறை ஆசிரியர், ஆசிரியைகளை அழைத்து கவுரவிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எது எப்படியோ, ஈகோவும், சுய கெளரவமும் இல்லாத பள்ளிக்காலம் பொற்காலம். வாழ்வில் ஒரு முறை மட்டுமே வரும் வசந்தகாலம். அந்த காலத்திற்கு நாம் பின்னோக்கி செல்ல நினைவுகளாலும், முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்புகளாலும் மட்டுமே முடியும்.

இது உண்மை தானே, நட்பூக்களே...!

இதை படிப்பவர்கள், உங்கள் பள்ளியிலும் முன்னாள் மாணவர் சந்திப்பை நிகழ்த்துங்கள். எத்துணை வயதானால் என்ன? கள்ளமில்லா மனங்கள் சங்கமித்து அங்கே மணம் வீசட்டும்..!

வாழ்த்துக்கள்..!

Updated On: 3 July 2022 4:20 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மூன்றாவது முறையாக மோடி மேஜிக்! டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு
  2. தமிழ்நாடு
    தேர்தல் கால சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
  3. வீடியோ
    Free Bus கொடுத்து ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த திமுக !...
  4. வீடியோ
    Stalin ஒன்னும் செய்யல திமுக இருந்து என்ன புரியோஜனும் ! #public...
  5. இந்தியா
    தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்
  6. இந்தியா
    தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
  7. கிணத்துக்கடவு
    ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
  8. வீடியோ
    Central Chennai-யில் பாஜகக்கு பெருகும் ஆதரவு மண்ணை கவ்வும் திமுக !...
  9. வீடியோ
    கீழ்த்தரமாக பேசும் Dayanidhi சென்னை மக்கள் குமுறல் ! #dmk #dayanidhi...
  10. வீடியோ
    திமுக பாஜக அதிமுக வெல்ல போவது யார் ? #dmk #admk #bjp #election...