/* */

சிங்காநல்லூரில் போக்குவரத்து மாற்றம்: சோதனை ஓட்டம்

சிங்காநல்லூர் சிக்னலில் வாகன நெரிசலை போக்க போக்குவரத்தை மாற்றம் செய்து சோதனை ஓட்டம் தொடங்கியது.

HIGHLIGHTS

சிங்காநல்லூரில் போக்குவரத்து மாற்றம்:  சோதனை ஓட்டம்
X

சிங்காநல்லூர் சந்திப்பு

கோவை மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதில் வாகன நெரிசல் ஏற்படும் இடங்களை காவல்துறையினர் கண்டறிந்து வருகின்றனர். இதில் சில இடங்களில் சிக்னலை அகற்றி வாகனங்கள் நிற்காமல் எளிதாக செல்ல ரவுண்டானா அமைத்து உள்ளனர். காவல்துறையின் இந்த முயற்சி பலன் அளித்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் கோவை- திருச்சி ரோடு சிங்காநல்லூர் சிக்னலில் 4 சாலைகள் சந்திக்கும் இடத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் கடும் நெரிசல் ஏற்பட்டு வந்தது. அதிலும் குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. எனவே வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

எனவே சிங்காநல்லூர் சிக்னலில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் முன்னிலையில் சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர்கள் உதவியுடன் சிங்காநல்லூர் சிக்னலில் வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க சோதனை முயற்சியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் மதிவாணன் கூறுகையில், கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சிக்னல்களை அகற்றி விட்டு ரவுண்டானா அமைக்கப்பட்டு வருகிறது. அது பயன் அளிக்கும் வகையில் உள்ளது.

எனவே சிங்காநல்லூர் சிக்னலிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரவுண்டானா அமைக்காமல் சோதனை முயற்சியாக போக்குவரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

அதன்படி ஒண்டிப்புதூரில் இருந்து சிங்காநல்லூர் பேருந்து நிலையத்துக்கு வலது புறம் திரும்ப முடியாது. அந்த வாகனங்கள் நேராக உழவர் சந்தை அருகே யூ-டர்ன் எடுத்து திரும்பி சிங்காநல்லூர் பேருந்து நிலையத்துக்கு செல்லலாம்.

அதுபோன்று வெள்ளலூரில் இருந்து சிங்காநல்லூர் பேருந்து நிலையம் செல்லும் வாகனங்களும் இடதுபுறம் திரும்பி உழவர் சந்தை அருகே யூ-டர்ன் செய்து செல்லலாம்.

சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து வலதுபுறமாக ராமநாதபுரம் நோக்கி செல்லும் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி சிறிது தூரம் சென்று யூ-டர்ன் எடுத்து திரும்பி செல்லலாம்.

திருச்சி சாலையில் நேராக செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் செல்லலாம். இதன்மூலம் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். தற்போது அங்கு சோதனை ஓட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது என்று கூறினார்

Updated On: 31 May 2023 4:05 AM GMT

Related News