கொரோனா விதிமுறைகளை பின்பற்ற, கோவை மக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
Coimbatore News, Coimbatore News Today-கொரோனா வைரஸ் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால், கோவை கலெக்டர் சமீரன் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
HIGHLIGHTS
Coimbatore News, Coimbatore News Today- சீனாவில் பரவி வரும் பிஎப்.7 கொரோனா வைரஸ் உலக நாடுகள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக்கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் கலந்து கொண்டு, தங்களது ஆலோசனையை வழங்கின.
இந்த நிலையில், பிஎப்.7 கொரோனா வைரஸ் தொடர்பாக, மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்துரையாடியபோது, 'மாநிலங்கள் விழிப்புடன் இருப்பதோடு, கொரோனாவை கட்டுப்படுத்த தயார் நிலையில் இருக்க வேண்டும். இதற்கு முன்பு கொரோனா பரவலை தடுக்க பணியாற்றியது போலவே, தற்போதும் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். கொரோனா கண்காணிப்புகளை தீவிரப்படுத்தி சோதனையை அதிகப்படுத்த வேண்டும். மருத்துவமனை உட்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டும்,' என அறிவுறுத்தி உள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் இது தொடர்பான முன்னெச்சரிகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதன் ஒரு பகுதியாக வெளிநாட்டு விமான பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது;
கொரோனா வைரஸ் மீண்டும் சீனா, பிரேசில், பிரான்ஸ் நாடுகளில் அதிகமாக பரவி வருகிறது. இந்தியாவில் ஒடிசா, குஜராத் ஆகிய மாநிலங்களில் புதிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டு உள்ளனர்.
இதன்காரணமாக, கோவை விமான நிலையத்தில் வெளி நாடுகளில் இருந்து வருகிற பயணிகளை நோய் தொற்று பரிசோதனை செய்யும் பணி தீவிரபடுத்தப்பட்டு உள்ளது. கோவைக்கு வரும் பயணிகளில், பொதுவாக 2 நபர்களுக்கு சளி மாதிரி எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த பணிக்காக மருத்துவ அலுவலர் சுகாதார ஆய்வாளர், ஆய்வக நுட்புனர் ஆகியோர் கொண்ட 3 குழுக்கள் பணியில் இருந்து நோய் கண்காணிக்கும் பணியை 24 மணிநேரமும் சுழற்சி முறையில் மேற்கொள்ள உள்ளார்கள்.
இதில் நோய் அறிகுறிகளுடன் வந்தால், அவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள். மற்ற பயணிகள் வீட்டிலேயே தங்களை சுய கண்காணிப்பு செய்து கொள்ளவேண்டும்.
சுய கண்காணிப்பின்போது, நோய் அறிகுறி தெரிய வந்தால் உடனே சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு 1075 என்கிற எண்ணில் பயணிகள் தெரிவிக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து தங்களது பகுதிக்கு வருகிற பயணிகளை கண்காணிக்க வட்டார அளவில் சுகாதார ஆய்வாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களது மாதிரி மரபணு சோதனைக்கு, சென்னையில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முக கவசம் அணிதல், கைகளை சோப்பு கொண்டு கழுவுதல், தனி மனித இடைவெளி கடைபிடித்தல், இருமல், தும்மல் ஆகியவை இருக்கும்போது வாய் மற்றும் மூக்கு பகுதியை மூடிக் கொள்ளுதல் போன்ற பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். அச்சம் கொள்ளத் தேவை இல்லை.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.