மின்சார சட்ட திருத்த மசோதாவால் இலவச மின்சாரம் பெறுவோர் பாதிக்கப்படுவர் - அமைச்சர் செந்தில் பாலாஜி
ஒன்றிய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவால், தமிழகத்தில் இலவச மின்சாரம் பெறுவோர் கடுமையாகபாதிக்கப்படுவர் என, கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
HIGHLIGHTS
கோவை நவஇந்தியா அருகே உள்ள தனியார் ஓட்டலில், ஒருங்கிணைந்த கோவை மாவட்ட இளைஞரணி, மாணவரணி, மகளிரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடந்தது.
அதன்பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
வரும் 23ம் தேதி மாலை, தமிழக முதல்வர் கோவை வருகிறார். மறுதினம் காலை கிணத்துக்கடவில் நடைபெறும் நிகழ்ச்சியில், 82,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார். பொள்ளாச்சியில் மாற்றுக் கட்சியினர், புதிய உறுப்பினர் என ஐம்பதாயிரம் பேர் இணையும் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்கிறார்.
ஒன்றிய அரசின் இந்த மின்சார சட்ட திருத்த மசோதா, ஏழை மக்களுக்கு பாதுகாப்பற்ற மசோதா. 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், குடிசைகளுக்கு இலவச மின்சாரம் போன்றவை பாதிக்கப்படும். இலவச மின் திட்டங்களை செயல்படுத்த முடியாத சூழல் ஏற்படும்.
மாநில அரசின் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை மற்றும் அதன் செயல்பாடுகளை மத்திய அரசு கட்டுப்படுத்தும் சூழல் உருவாகும். மின்சார வாரியம் கடனை வாங்கி, ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளது ஆனால் தனியார் இந்த கட்டமைப்பை பயன்படுத்தி மின்சார விநியோகம் செய்யலாம் என இந்த சட்ட திருத்த மசோதாவில் உள்ளது. எந்தவித ஆதாரமுமின்றி, ஒரு உரிமையாளிடமிருந்து தொழில் வளர்ச்சி உள்ள நகரங்கள், குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் மின்விநியோகம் தனியாக செய்ய முடியும். இதனால் இலவச மின்சாரம் பெறுவோர், பெரும் பாதிப்படைவா். இந்த மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறும் வரை திமுக தொடர்ந்து எதிர்ப்பை தெரிவிக்கும்.
எதிர்க்கட்சித் தலைவர், 10 ஆண்டுகளாக அவர்கள் ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்கிறார். கடந்த அதிமுக ஆட்சியில் 2012, 13 மற்றும் 14ம் ஆண்டுகளில் என தொடர்ந்து மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது விசைத்தறியாளர்களுக்கு ஒரு ரூபாயாக இருந்த மின் கட்டணத்தை, அதிமுக ஆட்சியில் இரண்டு ரூபாய் 30 பைசா உயர்த்தினர். தற்போது, திமுக ஆட்சியில் 70 காசு தான் உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
இவ்வாறு செந்தில் பாலாஜி கூறினார்.