கோவை மாணவி தற்கொலை: ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 2 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி
நீதிமன்ற வளாகத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்திக்கு எதிராக முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS
கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் பாலியல் தொல்லை குறித்து மாணவி புகார் அளித்தும் பள்ளி முதல்வர் மீரா நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்நிலையில் கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஞாயிறுதோறும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையுடன் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி குலசேகரன் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவி குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது 2 நாட்கள் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் விசாரணைக்காக மிதுன் சக்கரவர்த்தியை அழைத்துச் சென்றனர்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் "வாத்தியார், கண்டிப்பாக உன்னை விட மாட்டாங்க. உனக்கு கண்டிப்பா தண்டனை கிடைச்சே தீரும்" என உக்கடம் பகுதியை சேர்ந்த இஸ்மாயில் என்பவர் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சமாதானப்படுத்திய காவல் துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.