கோவையில் கிணறுக்குள் பாய்ந்த கார்; கல்லுாரி மாணவர்கள் மூன்று பேர் பலி
கோவை, தொண்டாமுத்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், கிணறுக்குள் விழுந்தது. இதில் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.
HIGHLIGHTS
கோவை வடவள்ளியைச் சேர்ந்த ரோஷன், ஆதர்ஷ், நந்தனன் மற்றும் ரவி கிருஷ்ணன் ஆகிய நான்கு பேரும் கல்லூரி மாணவர்கள். தொண்டாமுத்தூர், சிறுவாணி சாலையில் உள்ள தனியார் கிளப்பில் நேற்றிரவு ஓணம் பண்டிகையை கொண்டாட சென்றனர். கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு, இன்று காலை ஐந்தரை மணியளவில், மீண்டும் வடவள்ளியை நோக்கி காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது மாணவர்கள் ஓட்டி வந்த கார், தென்னமநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே உள்ள வளைவில் திரும்பும் போது, கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த இரும்பு கேட்டை உடைத்துக் கொண்டு பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான 70 அடி ஆழ விவசாய கிணறுக்குள் பாய்ந்தது.
காரை ஓட்டிய ரோஷன் என்ற மாணவர், காரின் கதவை திறந்து வெளியேறி தப்பினார். மற்ற மூன்று மாணவர்களும் காருடன் கிணறுக்குள் மூழ்கி, உயிரிழந்தனர். விபத்து குறித்து தொண்டாமுத்தூர் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களின் சடலம் மற்றும் கார் மீட்கப்பட்டது.