ஈமு கோழி மோசடி வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தன்டனை: ரூ .72 லட்சம் அபராதம்
கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் சுமார் 37 நபர்களிடம் இருந்து, ரூ.1.கோடியே இரண்டு லட்ச ரூபாயை வசூலித்துள்ளனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் கடந்த 2011ம் ஆண்டில் ஆர்.கே. ஈமு பார்ம்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில், அப்பகுதியைச் சேர்ந்த குருசாமி, கிரிமுருகன், குருசாமியின் மனைவி சுசீலா, லிங்கசாமி ஆகிய 4 பேர் இணைந்து ஈமு கோழிப்பண்ணை நடத்தி வந்தனர். தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக, பொதுமக்களிடத்தில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் சுமார் 37 நபர்களிடம் இருந்து, ரூ.1 கோடியே இரண்டு லட்ச ருபாயை வசூலித்துள்ளனர். ஆரம்ப காலநிலையில் முறையாக வட்டியினை வழங்கி வந்த நிறுவனம், பின்பு நாளடைவில் முதலீடு செய்தவர்களுக்கு வட்டி பணத்தை தராமலும், அவர்களுக்கு முறையாக பணத்தை வழங்காமலும் இழுத்தடித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த குணசேகரன் என்பவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, ஈரோடு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கமானது கோவை டான்பிட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நான்கு பேரும், பொதுமக்களிடத்தில் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதில் குருசாமி மற்றும் கிரிதரன் ஆகியோருக்கு 72 லட்ச ருபாய் அபராதமும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் அபராத தொகையினை பாதிக்கப்பட்ட 37 நபர்களுக்கும் பிரித்து கொடுக்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சுசிலா விடுதலை செய்யப்பட்ட நிலையில், லிங்குசாமி ஏற்கனவே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.