அரசு பேருந்துகளில் 5 வயது வரை கட்டணம் கிடையாது: தமிழக அரசு
தமிழகத்தில், 8,000 அரசு பேருந்துகளில் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் இனி கட்டணம் செலுத்தாமல் இலவசமாகச் செல்லலாம்
HIGHLIGHTS
தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில், 8,000 டவுன்நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் அனைத்து அரசு பேருந்துகளிலும் 5 வயது வரையுள்ள குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை. 3 வயது முதல் 12 வயது வரையான சிறுவர், சிறுமிகளுக்கு பாதி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது, 5 வயது வரையுள்ள குழந்தைகள் இனி அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.
அதனை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் 5 வயது வரை கட்டணம் ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐந்து வயது முதல் 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர்களிடம் பாதி கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.