விஜய் ரசிகர் மன்றத்தினர் உள்ளாட்சித் தேர்தலில் 49 பேர் வெற்றி
தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் மன்றத்தினர் 49 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளனர்.
HIGHLIGHTS
ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் களமிறங்கி ஒன்பது மாவட்டங்களிலும் ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு 169 இடங்களில் விஜய் ரசிகர்கள் போட்டியிட்டு இதில் இன்று மாலை 4.30 மணி வரை ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 36 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 13 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் இளைஞர்கள், இளம்பெண்கள் உள்பட மன்ற நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்குசேகரித்தனர். அப்போதே இந்த மன்றத்தில் உற்சாகமடைந்து காணப்பட்டனர். இந்த நிலையில் தற்போது வாக்குஎண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
மாமண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடப்பாடி4வது ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிட்ட ரீனா புருஷோத்தமன் வெற்றி பெற்றுள்ளார். அதே போல் மாமண்டூர் இரண்டாவது ஊராட்சியில் 2 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட லோகநாதன் வெற்றி பெற்றுள்ளார். காஞ்சிபுரம் கருப்படித்தட்டை காந்தி நகர் 1ஆவது வார்டு உறுப்பினர் தேர்தலில் விஜய் ரசிகர் மன்ற நகர செயலாளர் எம். பிரபு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.