பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சமத்துவ மக்கள் கழகம் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னையில் சமத்துவ மக்கள் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
சென்னை வண்ணாரப்பேட்டையில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து சமத்துவ மக்கள் கழகம் நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல் ,டீசல், சமையல் எரிவாயு சுங்கச்சாவடி கட்டணம் உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்
' பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் மக்கள் பெரிதும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். அன்றாட கூலித்தொழிலாளர்கள் இருசக்கர வாகனத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.தினமும் 200 ரூபாய் சம்பாதிப்பவர் கூட 150 ரூபாய்க்கு பெட்ரோல் போட செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்றும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை ஏற்றி உள்ளனர்.
5 மாநில தேர்தல் காரணமாக 137 நாட்களாக ஒரே விலையில் நீடித்த பெட்ரோல் டீசல் விலை கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் தினமும் நாள்தோறும் விலை உயர்ந்து வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் நாளுக்குநாள் விலை ஏற்றத்தினால் இன்று பெட்ரோல் 109 ரூபாய் 34 காசும், டீசல் 99 ரூபாய் 42 காசுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.15 நாட்களுக்குள் 7 ரூபாய் 94 காசுகள் உயர்ந்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வினால் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும்உயர்ந்துள்ளது.காய்கறிகள் உணவுப் பொருட்கள் ஓட்டலில் உணவு வகைகள் என அனைத்தும் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு நேரடியாக ஏற்று விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பெட்ரோல்-டீசல் மூலம் வரியாக 8 ஆண்டுகளில் மத்திய அரசு 27 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது எரிபொருள் விலை ஏற்றத்திற்கு இடையே நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் 40 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை இன்று ரூபாய் 268.50 பைசா உயர்ந்து ரூபாய் 2,406 / க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் ராஜபக்சே அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இதே போன்ற நிலையில் இந்தியாவுக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. மத்திய அரசு உடனடியாக பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு அதனை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லை என்றால் மக்கள் புரட்சி வெடிக்கும் என்றார்.