வங்கிக் கணக்கில் விழுந்த 9000 கோடி ரூபாய்! அய்யய்யோ ஷாக் மேல ஷாக்!
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் வாடிக்கையாளராக இருக்கும் கார் ஓட்டுநர் ஒருவரின் வங்கிக் கணக்கில் திடீரென 9000 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
HIGHLIGHTS
வாடகை கார் ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் தவறுதலாக 9000 கோடி ரூபாய் வரவு வைப்பு: கவனக்குறைவு என்ற வங்கி நிர்வாகம்
திடீரென்று ஒருநாள் உங்கள் வங்கிக் கணக்கில் 1 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டிருப்பதை அறிந்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்? 1 கோடி ரூபாய்க்கே துள்ளிக் குதித்து சந்தோஷப்படுவீர்கள் என்றால் 100 கோடிக்கு?
சென்னையைச் சேர்ந்த வாடகை கார் ஓட்டுநருக்கு 100 இல்லை 1000 இல்லை 9000 கோடி ரூபாய் வந்து விழுந்திருக்கிறது. வங்கிக் கணக்கில் இப்படி வரவு வைக்கப்பட்டுள்ளதை தனது மொபைல் மெசேஜ் வாயிலாக அறிந்த அவர் மகிழ்ச்சியில் விண்வெளிக்கே பறந்திருப்பார்தானே. ஆனால் பறக்க ஆரம்பிக்கும்போதே இதில் 21 ஆயிரம் ரூபாய் அளவுக்கு அவர் செலவு செய்துவிட்டார்.
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் ராஜ்குமாரின் வங்கிக் கணக்கில் கடந்த 17 ஆம் தேதி தவறுதலாக 9000 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இதை அறிந்து இன்ப அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார், அதில் இருந்து 21 ஆயிரம் ரூபாயை தனது நண்பருக்கு அனுப்பியுள்ளார்.
அதற்குள் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி நிர்வாகம் தொடர்பு கொண்டு, தவறுதலாக வரவு வைக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தது. அதன்படியே ராஜ்குமாரிடம் பேசி 21000 ரூபாய் போக மீதி பணத்தை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி நிர்வாகம் பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்துள்ளது. வங்கி நிர்வாகத்தின் கவனக்குறைவுதான் இந்த தவறுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், இப்படி ஒரு பெரிய தொகையை தவறுதலாக வரவு வைப்பது சாத்தியமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. தவறுதலாக வரவு வைக்கப்பட்ட பணத்தை முழுமையாக திரும்ப பெற்றுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தவறுக்கு காரணமான ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.